×

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 5 வயது சிறுமிக்கு பிறவியிலேயே ஒட்டியிருந்த கைவிரல்கள் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் பிரிப்பு

*டீன் சிவக்குமார் பேட்டி

தூத்துக்குடி : தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 5வயது சிறுமிக்கு பிறவியிலேயே ஒட்டியிருந்த கைவிரல்கள் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் பிரிக்கப்பட்டது. தூத்துக்குடி டி.எம்.பி.காலனி 5வது தெருவைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி சுரேஷ்(40), சுமதி தேவிகா(33). இத்தம்பதியரின் 5வயது மகள் செல்வ ஸ்ரீஜா. இவர் பிறக்கும் போதே வலதுகையில் 3, 4வது விரல்கள் ஒட்டிய நிலையில் பிறந்துள்ளார்.

இக்குழந்தை வளரும்போது நாளடைவில் அந்த கையில் 2 விரல்கள் ஒட்டிய நிலையிலேயே இருந்ததால், அந்த கையால் இயல்பாக எந்த வேலையையும் செய்ய முடியாத நிலை இருந்தது. மேலும் அந்த கையில் வலியும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர்களை அணுகியுள்ளனர். அப்போது அங்குள்ள பிளாஸ்டிக் சர்ஜரி துறையைச் சேர்ந்த டாக்டர் ராஜ்குமார் அச்சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்து ஒட்டிய 2 விரல்களை பிரிக்க முடிவு செய்தார்.

முதலில் அந்த அறுவை சிகிச்சைக்கு தேவையான பல்வேறு பரிசோதனைகளை அவர் பரிந்துரைத்தார். அந்த பரிசோதனைகளுக்குப் பிறகு பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 2022 ஜூலை 7ம் தேதி, அக்குழந்தையின் 5 வயதில் மருத்துவமனையின் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை துறையைச் சேர்ந்த டாக்டர்கள் ராஜ்குமார், பிரபாகர், ராஜா, அருணாதேவி ஆகியோர் மயக்கவியல் துறை நிபுணர்கள் உதவியோடு ஒட்டிய 2 கை விரல்களை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் வெற்றிகரமாக பிரித்து எடுத்தனர்.

இந்த பிளாஸ்டிக் சர்ஜரி குறித்து நேற்று தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டீன் சிவக்குமார் பேட்டியளித்தபோது, தூத்துக்குடியைச் சேர்ந்த சுரேஷ் மகளான செல்வஸ்ரீஜா பிறக்கும் போதே வலது கையில் 2 விரல்கள் ஒட்டிய நிலையில் பிறந்துள்ளார். அந்த பெண் குழந்தைக்கு ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை துறை மருத்துவர்கள், 2 விரல்களுக்கு இடையே உள்ள ரத்த ஓட்டங்களில் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல், அதிலுள்ள சவால்களை சரியான முறையில் அணுகி அறுவை சிகிச்சை மூலம் பிரித்தெடுத்துள்ளனர். அதன் பிறகு அக்குழந்தைக்கு உரிய பயிற்சி மற்றும் மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. தற்போது அக்குழந்தையின் கை விரல்கள் இயல்பான செயல்திறனுடன் உள்ளது. இதனால் அக்குழந்தையும், பெற்றோரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அரசு காப்பீட்டுத்திட்டம் மூலம் இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது” என்றார்.

பேட்டியின்போது தூத்துக்குடி அரசு மருத்துவமனை உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெபமணி, மருத்துவ கண்காணிப்பாளர் குமரன், ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை துறை டாக்டர் ராஜ்குமார் மற்றும் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சிறுமி மற்றும் சிறுமியின் பெற்றோர் உடனிருந்தனர்.

The post தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 5 வயது சிறுமிக்கு பிறவியிலேயே ஒட்டியிருந்த கைவிரல்கள் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் பிரிப்பு appeared first on Dinakaran.

Tags : Tuticorin Government Hospital ,Dean Sivakumar Tuticorin ,Laborer Suresh ,Sumathi Devika ,TMP Colony 5th Street, Thoothukudi ,Ithampatiyar ,Thoothukudi Government Hospital ,Dinakaran ,
× RELATED வாஸ்குலர் அறுவை சிகிச்சையை...